ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர்.
இதில் ஆரோக்கியடேனியல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் பெரிக், சீனு, சசிக் குமார், முக்கூரான், முத்து சரவணன், காளிதாஸ், செந்தில் ஆகிய 7 மீனவர்கள் பாக் நீரிணை கடல் பகுதியில் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 7 மீனவர்களையும் கைது செய்தனர்.
பின்னர், சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்நாட்டு மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 3 நாட்களில் மட்டும் ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், 15 மீனவர்களைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் கடிதம்: இதற்கிடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது: கடந்த ஜூன் 30-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்படகினையும் இலங்கைக் கடற் படையினர் சிறைபிடித்துள்ளனர்.
ஏற்கெனவே 48 இந்திய மீனவர்கள் இலங்கைக் காவலில் உள்ள நிலையில், இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள் மீனவ சமூகத்தினரிடையே கடுமையான துயரத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி வருகிறது.
எனவே, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன் பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.