சென்னை: தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 பேருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தெரு நாய்கள், வளர்ப்புப் பிராணிகள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்கு ரேபிஸ் தடுப்பூசி உள்ளது.
ஆனால் தெரு நாய்களுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் தடுப்பூசி முறையாக செலுத்தப்படாததால், மனிதர்களை நாய்கள் கடிக்கும்போது ரேபிஸ் தொற்று ஏற்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் நாய்க்கடியால் 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 40 பேர் ரேபிஸ் தொற்றால் இறந்துள்ளனர்.
இந்த ஆண்டில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் வரை நாய்க்கடி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நாய்க்கடிக்கு உள்ளானவர்களில் சிலர் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல், காலதாமதமாக சிகிச்சை பெற்றதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய்க்கடியால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டாலும், அனைவருக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுவதில்லை.
நாய் கடித்தாலே ரேபிஸ் தொற்று ஏற்பட்டு விடுவதில்லை. ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, வவ்வால் உள்ளிட்ட விலங்குகள் கடித்தாலும் பாதிப்பு ஏற்படும். எந்த வகை விலங்கு கடித்தாலும் முறையாக சிகிச்சை பெற வேண்டும். இதற்கான சிகிச்சை முறை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் உள்ளது” என்றனர்.