திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் நிலைய விசாரணையின் போது இறந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. அஜித் குமாரைத் தாக்கிய காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் எம்.எஸ். பாஸ்கர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்க்கும் பதிவில்,
‘லாக்கப் கொலைகள், பழிக்குப்பழி கொலைகள், வரதட்சணை கொடுமை தற்கொலைகள், வயது பாராமல் மிருகத்தனமான பாலியல் குற்றங்கள், கொடூரமான கொள்ளை சம்பவங்கள்.. இப்ப அஜித்குமார் என்ற காவலாளி இளைஞர் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். அதை யாரோ ஒருவர் படமாக்கி அது வலை தளங்களில் பரவி வருகிறது. பார்க்கும் போதே மனம் பதறுகிறது.
உயர் அதிகாரிகள் உத்தரவிட்டார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், அடித்து கொல்பவர்களுக்கு மனதில் சிறிதாவது ஈவிரக்கம் வேண்டாமா ?
மிளகாய் பொடியை கரைத்து வாயில் ஊன்றுவதா?
காரில் நகை இருந்ததற்கு ஆதாரம் என்ன?
அப்படி இருந்தது என்றால் சாவியை ஏன் மற்றவர் கையில் கொடுக்க வேண்டும்?
அஜித்குமார் எடுத்ததை பார்த்தவர் யார்?
தனக்கு வண்டி ஓட்டத்தெரியாது… வேறு ஒருவரை வைத்து நகர்த்தி நிறுத்துகிறேன் என்று அந்த இளைஞர் சொன்னதாகச் சொல்கிறார்கள்.
நகர்த்தி நிறுத்திய அந்த நபர் யார்?
அவரை விசாரித்தார்களா?
மேலிட உத்தரவு வந்தால் மிருகத்தனமாக, உயிர் போகுமளவு தாக்கலாமா?
இவருக்கு வந்த வலிப்பும், மாரடைப்பும் சிறை சென்ற இந்த இளைஞரை விட எத்தனையோ வயதான பெரிய மனிதர்களுக்கு வராத மர்மம் என்ன?

ஏழைக்கு இதுதான் நீதியா?
பென்னிக்ஸ், ஜெயராஜ் வழக்கில் தீர்ப்பு என்ன?
ஶ்ரீமதி மரண விஷயம் என்னவாயிற்று?
நண்பர் திரு.ஆம்ஸ்ட்ராங் கொலையில் தீர்ப்பு என்ன?
எல்லாவற்றுக்கும் அரசைக் குறை கூறலாமா?
அரசுப்பதவியில் உள்ளவர்களால் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணித்துக்கொண்டே இருக்க முடியுமா?
குற்றம் செய்தவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படுமா?
இப்படி அனைவர் மனங்களிலும் எண்ணற்ற கேள்விகள்!
காலமும், கடவுளும்தான் பதில் சொல்ல வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்