காத்மாண்டு,
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆக.28 ஆம் தேதி, அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், காலக்கெடு முடிவடைந்தும் பதிவு செய்யாத நிறுவனங்களின் சமூக வலைதளங்கள் அனைத்தும், இன்று நள்ளிரவு முதல் நேபாளத்தில் தடை செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதில், பேஸ்புக், எக்ஸ் , இன்ஸ்டா மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களும் அடங்கும். டிக்டாக் நிறுவனம் பதிவு செய்ய பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், டெலிகிராம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேபாள அரசின் இந்த நடவடிக்கை குறித்து மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது வரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை