புதுடெல்லி,
ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. மேலும் முதலீட்டாளர்களை கோடிக்கணக்கான ரூபாய் ஏமாற்றி கணிசமான வரிகளை ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத சூதாட்ட செயலிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் தற்போது ‘ஓன்எக்ஸ்பெட்’ (1xBet) என்ற சட்டவிரோத பந்தய செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கின் விசாரணையின் பகுதியாக அமலாக்க இயக்குநரகம் யுவராஜ் மற்றும் ராபின் உத்தப்பாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிறுவனம் தொடர்பான விளம்பரங்களில் இருவரும் தோன்றியதால் அவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி ராபின் உத்தப்பாவை வருகிற 22-ம் தேதியும், யுவராஜ் சிங்கை 23-ம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவானை அமலாக்கத்துறை விசாரித்திருந்தது.