இந்தியாவுடன் மீண்டும் தோல்வி.. இதுதான் காரணம்.. பாகிஸ்தான் கேப்டன் விளக்கம்!

ஆசிய கோப்பை தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது சூப்பர் 4 சுற்றை எட்டி அதன் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளதிருக்கிறது. ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஹாங்காங் மற்றும் ஓமன் ஆகிய அணி வெளியேறி இருக்கிறது. சூப்பர் 4 சுற்றில் முதல் போட்டியாக வங்கதேசம் அணியும் இலங்கை அணியும் மோதின. இதில் வங்கதேசம் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. 

Add Zee News as a Preferred Source

இரண்டாவதாக நேற்று (செப்டம்பர் 21) பாகிஸ்தான் அணியும் இந்தியா அணியும் மோதின. முதல் போட்டியில் ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் இவ்விரு அணிகளும் மீண்டும் விளையாடியது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாஹிப்சாதா ஃபர்ஹான் 58, சைம் அயூப் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 21 ரன்கள் எடுத்திருந்தனர். 

இதையடுத்து இந்திய அணி 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி 18.5 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 74 ரன்கள் சுப்மன் கில் 47 ரன்கள் அதிகபட்சமாக அடித்தனர். இதன் மூலம் சூப்பர் 4 சுற்றிலும் வெற்றியுடன் இந்திய அணி தொடங்கி உள்ளது. மறுபக்கம் பாகிஸ்தான் இந்திய அணியுடன் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வங்கதேசம் மற்றும் இலங்கை அணியுடன் மோத இருக்கின்றன. சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடத்தில் வருபவர்கள் இறுதி போட்டியில் மோதுவர். 

இந்த நிலையில், இந்திய அணியுடனான தோல்வி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா பேசி இருக்கிறார். தோல்விக்கான காரணம் குறித்து அவர் விளக்கம் அளித்திருக்கிறார். “நாங்கள் இதைவிட சிறப்பாக விளையாட வேண்டும் என்பது அவசியமாகிறது. இது ஒரு நல்ல போட்டி. ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பவர்பிளேவில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். அது எங்களை போட்டியில் இருந்து வெளியேற்றியது. நாங்கள் பேட்டிங் செய்யும்போதும் முதல் 10 ஓவர்கள் நல்ல நிலையிலேயே இருந்தோம். ஆனால் அடுத்த 10 ஓவர்கள் சிறப்பாக அமையவில்லை. 

170 முதல் 180 ரன்கள் வரை இலக்கு என்பது போதுமான ஒன்றாக இருந்தாலும், இந்திய அணி பவர்பிளேவில் அதிரடியாக விளையாடியதுதான் இந்த போட்டியை மாற்றியது. தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு கொடுத்தனர். இதுவே நாங்கள் தோல்வி அடைந்ததுக்கு காரணம் என சல்மான் ஆகா கூறினார். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.