பெங்களூரு: முன்னாள் பிரதமரும் மஜத தேசிய தலைவருமான தேவகவுடாவுக்கு (92) கடந்த திங்கள்கிழமை இரவு திடீரென சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவருக்கு பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சரும், தேவகவுடாவின் இளைய மகனுமான குமாரசாமி நேற்று தனது தந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் குமாரசாமி கூறுகையில், ‘‘முன்னாள் பிரதமர் தேவகவுடா நலமாக உள்ளார். அவரது உடல்நிலை குறித்து கவலைப்படத் தேவையில்லை. கடவுள், மக்களின் ஆசியுடன், அவர் நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவர் மூன்று முதல் நான்கு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்புவார்” என்றார்.