1986-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறை.. ஆஸி. மண்ணில் இந்திய வீரர்கள் சாதனை

சிட்னி,

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று கொடுத்தது. வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் இந்தியா தரப்பில் பந்துவீசிய 6 பந்துவீச்சாளர்களும் குறைந்தபட்சம் ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதன்படி ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி தரப்பில் பந்து வீசிய 6 பந்துவீச்சாளர்களும் குறைந்தபட்சம் ஒரு விக்கெட் கைப்பற்றுவது 1986-ம் ஆண்டுக்கு பின் இதுவே முதல் முறையாகும். இந்த சாதனையை இந்த போட்டியின் மூலம் இந்திய வீரர்கள் படைத்துள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.