சென்னை: தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா போக்குவரத்து துறை ரூ.70 லட்சம் அபராதம் விதித்த நிலையில், கேரளாவுக்கு பேருந்துகளை இயக்க மாட்டோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்துகள் முறையாக வரி செலுத்தவில்லை என்றும் ஒருமுறை கேரளாவுக்கு செல்வதற்கான தற்காலிக அனுமதியைப் பெற்று பேருந்துகள் இயக்கப்பட்டதாகக் கூறி கொச்சியில், 30 ஆம்னி பேருந்துகளுக்கு தலா ரூ.2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை மொத்தம் ரூ.70 லட்சம் வரை நேற்று முன்தினம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க மாட்டோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்துக்கு நவ.7-ம் தேதி சென்ற 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரள போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டு, அந்தப் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கிவிடப்பட்டு, கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா போக்குவரத்துத் துறை ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்துள்ளது. இத்தகைய நடவடிக்கை, இரு மாநிலங்களுக்கு இடையேயான நீண்டநாள் நல்லுறவையும், பொதுப் போக்குவரத்து ஒத்துழைப்பையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நவ.7-ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படையும். மேலும், தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இந்த விஷயத்தில் தமிழக அரசும் கேரளா அரசும் உடனடியாகத் தலையிட்டு, இரு மாநிலங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.