சென்னை: இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நான் முதல்வன் (போட்டித் தேர்வுகள் பிரிவு) சிறப்புத் திட்ட இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ஆண்டு தோறும் 1000 மாணவர்களுக்கு, முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500-ம் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.25,000-ம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. தற்போது, யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில், நான் முதல்வன் யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத் தொகை பெற்ற 659 பயனாளிகளில், 155 பேர் முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 87 பேர் இங்கு பயிற்சி பெற்றவர்கள்.
இதைத்தொடர்ந்து, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி பெற ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். https://naanmudhalvan.tn.gov.in/ இணையதளம் மூலம் இன்று முதல் நவ.24 வரை விண்ணப்பிக்கலாம்.