ஹைதராபாத்: ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜ், ரானா, விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி உட்பட 29 பேருக்கு ஹைதராபாத் சிஐடி சிறப்பு விசாரணை குழு, நோட்டீஸ் அனுப்பி ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைத்து விளக்கம் கேட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த விவகாரம் தொடர்பாக சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.மேலும், சில வங்கி கணக்கு விவரங்களையும் அவர் சிறப்பு விசாரணை குழுவிடம் சமர்பித்தார்.
விசாரணை நடந்து முடிந்த பின்னர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 2016-ல் நான் ஒரு செயலிக்கு பிரமோஷன் செய்தேன். அந்த செயலி 2017-ல் ஆன்லைன் சூதாட்ட செயலியாக மாற்றப்பட்டது. இதனை அறிந்து அந்த ஒப்பந்தத்தை நான் ரத்து செய்து கொண்டேன். தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தவறு, தவறுதான் என்பதால் இது தொடர்பாக பொதுமக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். இவ்வாறு பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.