புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளி அமீர் ரஷித் அலி கைது செய்யப்பட்டு உள்ளார். இவர், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் ஆவார்.
கடந்த 10-ம் தேதி டெல்லியில் வெடிபொருள் நிரப்பப்பட்ட கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் நபி, கார் குண்டு தாக்குதலை நடத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது.
என்ஐஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி அமீர் ரஷித் அலி கைது செய்யப்பட்டு உள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார், இவரது பெயரில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஜம்முவின் சம்போரா பகுதியை சேர்ந்த அமீர் ரஷித் அலி டெல்லிக்கு வந்து ஐ20 காரை வாங்கி தனது பெயரில் பதிவு செய்துள்ளார். இந்த காரிலேயே வெடிபொருட்கள் நிரப்பப்பட்டு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. இவருக்கும் மருத்துவர் உமர் நபிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
வழக்கு தொடர்பாக இதுவரை 73 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். இதே வழக்கு தொடர்பாக டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேச போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
32 கார்கள் பறிமுதல்: டெல்லியை போன்று நாடு முழுவதும் கார்களை பயன்படுத்தி வெடிகுண்டு தாக்குதலை நடத்த ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பு சதித் திட்டம் தீட்டியிருந்தது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுஇருக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. சந்தேகத்துக்கு உரிய 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கார் குண்டுவெடிப்பை நடத்தியஉமர் நபி, பரிதாபாத்தில் தங்கியிருந்த வீட்டில் ரகசியமாக ஓர் ஆய்வகத்தை அமைத்துள்ளார். அவர் வெடிகுண்டு சோதனை நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.