
மதுரை மாநகராட்சியில் திமுக 67 கவுன்சிலர்களை பெற்றிருந்தும், மேயர், மண்டலத் தலைவர்களை நியமனம் செய்யப்படாதது திமுக – மார்க்சிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள், கவுன்சிலர்கள் இடையே நிர்வாக ரீதியாக திரைமறைவு அதிகார மோதலை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டதால் மேயர் இந்திராணி பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட 5 மண்டலத் தலைவர்களும் ராஜினாமா செய்தனர். மேயர் இல்லாததால் இயல்பாகவே துணை மேயர் நாகராஜன், மேயர் (பொ) என்ற பொறுப்புக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், ஆளும் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி அங்கம் வகிப்பதால் துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி நிர்வாகத்திடம் தான்தான் மேயர்(பொ) என்று கேட்க முடியாமலும், அவருக்கு மேயருக்குரிய அதிகாரத்தை மாவட்ட ஆளும்கட்சி அதிகார மையங்கள் விட்டுக் கொடுக்காமலும் உள்ளனர்.