முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

ராஞ்சி,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். தென் ஆப்பிரிக்க அணியின் வழக்கமான கேப்டன் பவுமாவுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக மார்க்ரம் தெரிவித்தார். இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பிடித்தனர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், கே.எல்.ராகுல் 60 ரன்களும், ரோகித் 57 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன், பர்கர், கார்பின் போஷ் மற்றும் ஓட்னீல் பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ரிக்கல்டன் மற்றும் அவரை தொடர்ந்து களமிறங்கிய குயிண்டன் டி காக் இருவரும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். இருவரின் விக்கெட்டுகளையும் ஹர்ஷித் ராணா தனது முதல் ஓவரில் காலி செய்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மார்க்ரமை 7 ரன்களில் அர்ஷ்தீப் சிங் காலி செய்தார். 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்க அணியை டோனி டி சோர்சி மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கே ஜோடி சேர்ந்து காப்பாற்ற போராடினர். இந்திய பந்துவீச்சை ஒரளவு தாக்குப்பிடித்து விளையாடிய இந்த ஜோடி 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. டி சோர்சி 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து பிரீட்ஸ்கே உடன் பிரெவிஸ் கை கோர்த்தார். இந்திய பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட பிரெவிஸ் அணிக்கு வேகமாக ரன் சேர்த்தார். பிரீட்ஸ்கே ஒருபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த பிரெவிஸ் அதிரடியாக ஆடினார். 28 பந்துகளில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் அடித்த நிலையில் பிரெவிஸ் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து கலமிறங்கிய மார்கோ ஜான்சன் ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டினார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரீட்ஸ்கே அரைசதம் அடித்தார். இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய மார்கோ ஜான்சன் 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் பிரீட்ஸ்கே – மார்கோ ஜான்சன் ஆடிய விதம் இந்திய அணிக்கு பயத்தை கொடுத்தது.

இருப்பினும் இந்த கூட்டணியை குல்தீப் யாதவ் காலி செய்தார். அவரது ஒரே ஓவரில் மார்கோ ஜான்சன் 70 ரன்களிலும் (39 பந்துகள்), பிரீட்ஸ்கே 72 ரன்களிலும் (80 பந்துகள்) ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த வீரர்களில் கார்பின் போஷ் அதிரடியாக விளையாடி தென் ஆப்பிரிக்க அணிக்கு நம்பிக்கை அளித்தார். அவருக்கு சிறிது ஒத்துழைப்பு கொடுத்த பிரெனலன் சுப்ராயென் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பர்கரும் 17 ரன்களில் அவுட்டானார்.

இறுதி கட்டத்தில் அதிரடியில் வெளுத்து வாங்கிய கார்பின் போஷ் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 18 ரன் தேவை என்ற நிலையில் கார்பின் போஷ் 67 ரன்களுடன் பேட்டிங் செய்தார்.

பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காத போஷ் 2-வது பந்தில் கேட்ச் ஆனார்.

49.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 332 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.