AVM: “முரட்டுக்காளை வந்தபோது சரவணன் சாருக்கு கடிதம் எழுதினேன்" – நினைவுகளைப் பகிரும் பார்த்திபன்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம். தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் ஏராளமான படங்களை தயாரித்துள்ளது.

ஏ.வி. மெய்யப்ப செட்டியாருக்கு பின் அந்த நிறுவனத்தை ஏ.வி.எம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவரின் காலத்தில் ஏ.வி.எம் நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டியது.

2014-ம் ஆண்டிற்கு பின் ஏ.வி.எம் நிறுவனம் தங்களின் சினிமா தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது. இதற்கிடையில், ஏ.வி.எம் சரவணன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் எனக் கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்த நிலையில், ஏ.வி.எம் சரவணன் இன்று அதிகாலை காலமானார். அவரின் உடல் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள 3வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு திரைப் பிரபலங்கள் தொடர்ந்து ஏ.வி.எம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, “ஏ.வி.எம் மூன்று எழுத்துகள் இருப்பது போல, பணிவு, பண்பு, ஒழுக்கம் – இவையெல்லாவற்றிற்கும் உருவம் கொடுத்தது போல வாழ்ந்தவர் ஏ.வி.எம் சரவணன். அவர் கைக் கட்டி கொண்டு நின்றாலும் கூட, நமக்கு அவர் மீது மரியாதையும் பயமும் ஏற்படும்.

அதுபோன்ற ஒரு மாபெரும் மாமனிதர் அவர். இன்று கூட அவரின் மறைவு செய்தி எனக்கு கிடைத்த போது, ‘3:30 மணிக்கு இறுதி மரியாதை’ என குறிப்பிட்டிருந்தார்கள்.

அவருக்கு ‘இறுதி மரியாதை’ என ஒன்று கிடையவே கிடையாது. அவருக்கு எப்போதும் மரியாதைதான். அதற்கான காரணம் அவர் மட்டுமல்ல, அவரின் தகப்பனார் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரும்.

ஏவிஎம் சரவணன்

என்னைப் போன்ற கலைஞர்களுக்கு சினிமா தான் கடவுள் அப்படி என்றால் ஏ.வி மெய்யப்பச் செட்டியார், ஏ.வி.எம் சரவணன் கடவுளின் பிரதிநிதிபோல.

ஏ.வி.மெய்யப்ப செட்டியார் மறைந்து, நீண்ட நாள்களுக்குப் பிறகு ஏ.வி.எம். சரவணன் தயாரித்தப் படம் ‘முரட்டுக்காளை’. அந்தப் படம் வந்த பிறகு நான் சரவணன் சாருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

அதில் ‘உங்கள் அப்பாவின் ஆன்மா இப்பொழுதுதான் சாந்தி அடைந்திருக்கும்’ என எழுதியிருந்தேன். ஏ.வி.எம் சரவணன் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது. ஆனால் இது இன்னொரு வகையில் ஈடு செய்யலாம்.

இப்போது அவர்களுடைய குடும்பத்தாரிடம் மீண்டும் ஏ.வி.எம் நிறுவனம் தொடர்ந்து படங்களை எடுக்க வேண்டும். சரவணன் சாரின் படத்தை போட்டு அவருக்கு அஞ்சலி என குறைந்தது 100 படங்களையாவது எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறேன்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.