நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு சில மணி நேரங்களே உள்ள நிலையில், இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, இளம் வீரர் துருவ் ஜூரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஞாயிற்றுக்கிழமை வதோதராவில் தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். சனிக்கிழமையன்று நடைபெற்ற வலைப்பயிற்சியின் போது, த்ரோ-டவுன் ஸ்பெஷலிஸ்ட் வீசிய பந்து ஒன்று எதிர்பாராத விதமாக ரிஷப் பந்தின் விலா எலும்பு பகுதியில் பலமாகத் தாக்கியது.
Add Zee News as a Preferred Source
NEWS
Rishabh Pant ruled out of #INDvNZ ODI series; Dhruv Jurel named replacement.
Details #TeamIndia | @IDFCFIRSTBankhttps://t.co/3hKb7Kdup2
— BCCI (@BCCI) January 11, 2026
தசைப்பிடிப்பு
இதனால் அவருக்கு பக்கவாட்டில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவக் குழு, அவர் உடனடியாக போட்டிகளில் பங்கேற்பது கடினம் என்றும், ஓய்வு தேவை என்றும் அறிவுறுத்தியது. இதன் காரணமாக, நியூசிலாந்துக்கு எதிரான இந்த முழு தொடரிலிருந்தும் ரிஷப் பந்த் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்பட்டாலும், மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ள துருவ் ஜூரலின் தற்போதைய ஃபார்ம் ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரல், ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி தனது திறமையை நிரூபித்தவர். ஆனால், இப்போது ஒருநாள் அணியில் அவர் இடம்பிடிக்க முக்கிய காரணம், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே ட்ராபி தொடரில் அவர் வெளிப்படுத்தி வரும் அசுரத்தனமான ஆட்டம்தான்.
விஜய் ஹசாரே தொடரில்
நடப்பு விஜய் ஹசாரே தொடரில், உத்தரப் பிரதேச அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஜூரல், பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் மட்டுமே அவர் 558 ரன்களை குவித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அவரது பேட்டிங் சராசரி 90-க்கும் மேல் உள்ளது. இந்த 7 இன்னிங்ஸ்களில் 2 சதங்களும், 4 அரைசதங்களும் அடங்கும். வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், ஒரு கேப்டனாகவும் ஜூரல் ஜொலித்து வருகிறார். அவரது சிறப்பான தலைமையின் கீழ், எலைட் குரூப் பி பிரிவில் உத்தரப் பிரதேச அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று, மொத்தம் 28 புள்ளிகளுடன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
தேர்வுக் குழுவின் அதிரடி முடிவு
சனிக்கிழமை மாலை ரிஷப் பந்தின் காயம் உறுதி செய்யப்பட்ட உடனேயே, தேர்வு குழுவினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். உள்ளூர் கிரிக்கெட்டில் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் ஜூரலை தவிர வேறு சிறந்த தேர்வு இருக்க முடியாது என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சனிக்கிழமை இரவே துருவ் ஜூரல் இந்திய அணியுடன் இணைந்துகொண்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துருவ் ஜூரலின் வருகை இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளில் நெருக்கடியான நேரங்களில் நிதானமாகவும், அதே சமயம் அதிரடியாகவும் விளையாடி பாராட்டு பெற்றவர் அவர். இப்போது ஒருநாள் போட்டியிலும் தனக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளக் காத்திருக்கிறார்.
About the Author
RK Spark