மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி உயர்வு| Dinamalar

புதுடில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கு, 3 சதவீதம் அகவிலைப் படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

டில்லியில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியில், 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

விலைவாசி உயர்வை ஈடு செய்ய அகவிலைப்படி வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு, 31 சதவீதம் அகவிலைப் படி வழங்கப்படுகிறது. இதனுடன் கூடுதலாக, 3 சதவீதம் அகவிலைப்படி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அகவிலைப்படி இந்தாண்டு ஜன.,1 முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வரும். அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, 9,544 கோடி ரூபாய் செலவாகும். இதனால், 47 லட்சத்து 68 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சத்து, 62 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உலக வங்கியின் நிதியுதவியில் மேற்கொள்ளப்படும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டிற்கான ‘ரேம்ப்’ திட்டத்திற்கு 6,062 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது.இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 6.30 கோடி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.