'ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதியுங்கள்' – கர்நாடக முதல்வருக்கு மாணவி கோரிக்கை

கர்நாடகா: “நாட்டின் எதிர்காலம் நாங்கள் என்பதை உணர்ந்து, ஹிஜாப் அணிந்து தேர்வெழுத எங்களை அனுமதிப்பது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை பரிசீலிக்க வேண்டும்” என்று, ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மாணவி ஆலியா ஆஸாதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளை அந்த நிர்வாகங்கள் அனுமதிக்கவில்லை. இந்து மாணவர்களும் காவி துண்டு அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு வந்தனர். அவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப் பட்ட தடையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

கடந்த 28-ம் தேதி தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பங்கேற்க கர்நாடக அரசு தடை விதித்தது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர். இந்நிலையில் வரும் ஏப்.22-ம் தேதி முதல் “2nd PU”எனப்படும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மாணவிகளில் ஒருவரான ஆலியா ஆஸாதி, தனது ட்விட்டர் பக்கத்தில், “வரும் ஏப்.22-ம் தேதி முதல் பனிரெண்டாம் வகுப்புத் தோர்வுகள் தொடங்கவுள்ளன. எங்கள் எதிர்காலம் பாழாகமால் தடுத்து நிறுத்துவதற்கு கர்நாடக முதல்வருக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது. நாங்கள் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதி வழங்க உத்தரவிடலாம். எனவே இந்த நாட்டின் எதிர்காலம் நாங்கள் என்பதை உணர்ந்து, எங்களது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஹிஜாப் போராட்டத்தின் காரணமாக ஏராளமான மாணவிகள் தேர்வை புறக்கணித்துள்ளனர். இவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படமாட்டாது என்று கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.