உலகம் முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் Zomato, Swiggy, Uber போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் படித்த பட்டதாரி இளைஞர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை, நடுரோட்டில் மக்கள் முன் இளம்பெண் ஒருவர் ஷூவால் அடிக்கும் காட்சிகள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை பீட்சா டெலிவரி செய்வதற்காகப் பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
#MadhyaPradesh: A girl beat up a biker with shoes near Russel Chowk of #Jabalpur district on Thursday evening after the youth arrived from wrong side and collided with her scooty.@fpjindia Video pic.twitter.com/ix9W7Kr5cE
— Siraj Noorani (@sirajnoorani) April 15, 2022
அவர் சாலையின் இடது பக்கம் பயணிக்காமல் அவசரமாக வலது பக்கம் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தனது ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் அந்த ஊழியர் மீது மோதி, தடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதில் அவருக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் தன் ஷூவை கழற்றி அந்த உணவு டெலிவரி ஊழியரைச் சரமாரியாகத் தாக்கினார்.
அருகிலிருந்தவர்கள் அவரை தடுக்க முயன்றும், ”கீழே விழுந்து அடிபட்டது எனக்குத் தானே தவிர உங்களுக்கு அல்ல” என்று கூறி அவருடைய ஷூவால் அந்த ஊழியரின் முகத்தில் தாக்கினார். அதன் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதை அங்கிருந்து ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அந்த வீடியோ மூலம் அந்த வாலிபர் மீதும், சாலையில் அந்த வாலிபரை அவமானப்படுத்திய அந்த பெண் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஸ்கூட்டர் நம்பர் மூலம் அந்தப் பெண்ணையும் தேடி வருகின்றனர்.