மயிலாடுதுறையில் ஆளுநர் கார் மீது கற்கள், கருப்பு கோடி வீசப்படவில்லை – தமிழக காவல்துறை விளக்கம்.!

தமிழக காவல்துறை சற்றுமுன் விடுத்துள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. R.N. ரவி அவர்கள் இன்று 19.04.2022 காலை 0750 மணிக்கு கடலூர் மாவட்டம். சிதம்பரம் அண்ணாமலை நகர் விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டு 08.30 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரம் (கொள்ளிடம்) சோதனை சாவடிக்கு வந்தடைந்தார். 

பின்னர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தருமபுரம் ஆதீனம் அவர்களை சந்திக்க திருக்கடையூர் கோவிலிருந்து புறப்பட்டார். 

இந்நிலையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து CPI (M) மாவட்ட செயலாளர் சீனிவாசன், தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் தெ.மகேஷ், மீத்தேன் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் திரு.த.ஜெயராமன் உள்ளிட்ட 73 நபர்கள், மயிலாடுதுறை சாலை மன்னம்பந்தல் AVC கல்லூரிக்கு எதிரே வடகரை சாலையில் கையில் கருப்பு கொடிகளுடன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்னர் 3 அடுக்கு இரும்பு தடுப்பு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டன. அதோடு அவர்களை அப்புறப்படுத்த காவல்துறை வாகனங்களும் அங்கே கொண்டு வரப்பட்டன. 

மாண்புமிகு ஆளுநர் அவர்களின் வாகனம் மற்றும் இதர கான்வாய் வாகனங்கள் காலை 09.50 மணிக்கு AVC கலை மற்றும் அறிவியல் கல்லூரியைக் கடந்து சென்றது. மாண்புமிகு கவர்னர் கான்வாய் சென்ற போது மாண்புமிகு கவர்னரின் கவனத்தை தங்கள்பால் ஈர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது ஒரு சிலர் கையில் ஏந்திய கொடிகளை ரோட்டை நோக்கி வீசினர். மாண்புமிகு கவர்னர் கான்வாய் முழுவதும் சென்ற பின்பு காவல் அதிகாரிகள் சென்ற வாகனங்கள் மீது சில கொடிகள் விழுந்தன. 

உடனடியாகப் பாதுகாப்பிற்கு இருந்தக் காவலர்கள் கொடிகளைக் கைப்பற்றி ஆர்ப்பாட்டக்காரர்களைத் கைது செய்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றினர். கைது செய்தவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வ எடுக்கப்பட்டு வருகிறது. 

மாண்புமிகு கவர்னர் பாதுகாப்பிற்காக மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவர் திரு.வே.பாலகிருஷ்ணன், இகா.ப. மேற்பார்வையில் இரண்டு காவல்துறைத் துணை தலைவர்கள், 6 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 6 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 21 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1120 காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாண்புமிகு கவர்னரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். மாண்புமிகு கவர்னர் கான்வாய் முற்றிலும் சென்ற நிலையில் அவர்கள் காவலர்களிடம் வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கருப்புக் கொடிகளை வீசி எறிந்தனர் என்பதுதான் உண்மை என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.