அமெரிக்காவில் பெண் தலைமை நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

வாஷிங்டன் :

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். நேற்று அவர் சிலிகான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றார். அங்குள்ள முன்னணி நிறுவனங்களின் பெண் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்தார்.

நிதி தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் உள்பட, பல்வேறு துறைகளை சேர்ந்த பெண் அதிகாரிகள் இச்சந்திப்பில் பங்கேற்றனர். இந்தியாவின் வளர்ச்சி பாதைக்கு தாங்கள் எந்தெந்த வழிகளில் பங்களிக்கலாம் என்பது குறித்து அவர்கள் ஆலோசனை வழங்கினர்.

இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் பெண்கள் மேம்பாட்டுக்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களை, நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.

மகளிர் சுய உதவி குழு திட்டம், கிராமப்புற பெண்களுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் திட்டம், பெண் தொழில் முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதற்கான ‘முத்ரா’ திட்டம் ஆகியவை பற்றி விளக்கினார்.

பண்டைய இந்திய நூல்களில் இருந்து வலிமையான, உத்வேகம் அளிக்கக்கூடிய பெண்களை பற்றி மேற்கோள் காட்டினார்.

தற்காலத்து பெண்களும் தங்கள் தொழில்நுட்ப திறனால், கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கும், புதிய உயரத்தை அடைவதற்கும் திறமை உள்ளவர்கள் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.