கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு நான்காவது அலை அல்ல: ஐசிஎம்ஆர் அறிவிப்பு

புதுடெல்லி: ‘இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் திடீரென அதிகரித்து இருப்பதற்கு  உள்ளூர் பரவல் மட்டுமே காரணம். இது, 4வது அலையின் தொடக்கம் அல்ல,’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் பல்வேறு நாடுகளில் கடந்த சில  நாட்களாக கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. வெளிநாடுகளில் சில புதிய உருமாற்ற வைரஸ்களும் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த வாரம் 2 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை, கடந்த 3 நாட்களாக 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால், நாட்டில் 4வது அலை தொடங்கி விட்டதாக பீதி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் சமிரான் பாண்டே நேற்று கூறுகையில், ‘‘இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் அதிகமாகி வருவதற்கு, உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே காரணம். நாடு முழுவதும் பரவலாக பாதிப்புகள் இருந்தால் மட்டுமே கவலை கொள்ள வேண்டும். எனவே, தற்போது ஏற்பட்டுஇருப்பது 4வது அலையின் தொடக்கம் அல்ல,’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.