மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது திமுக – எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி: மக்களை ஏமாற்றி வந்துள்ள திமுக இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மே தினத்தை ஒட்டி அண்ணா தொழிற்சங்கப்பேரவை சார்பில் கள்ளக்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “அதிமுக ஆட்சியின் போது தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் கடுமையான மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். எனவே இனி திமுக எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது.

நாட்டு மக்களை ஏமாற்றுகிற கட்சி திமுக கட்சி. விஞ்ஞான ரீதியாக மக்களை ஏமாற்றுகிற தலைவர் ஸ்டாலின். அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதையும், திறப்பதை தான் ஸ்டாலின் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். நீட் தேர்வு வர காரணம் திமுக. ஆனால் அதை மறைத்து அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டதாக பேராசிரியராக இருந்த பொன்முடி பொய் பேசுகிறார். பொய்யின் மொத்த உருவம் திமுக.

கிராமம் கிராமமாக பெட்டி வைத்து மனு வாங்கிய ஸ்டாலின் , இதுவரைக்கும் எத்தனை மனுக்களுக்கு தீர்வு கண்டிருக்கிறார். பெட்டியை நிரப்புவதில் தான் கவனம் செலுத்துகிறாரே தவிர மக்கள் மனுக்கள் வழங்கிய பெட்டிகள் மீது கவனம் செலுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகளை மூடியது தான் திமுக ஆட்சியின் சாதனை. கூட்டு பாலியல் பலாத்காரம், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, போக்ஸோ வழக்கு அதிகரிப்பு என சட்டம் ஒழுங்கு அடியோடு சரிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதை பொருள்கள். நாடாளுமன்றத்துக்கான தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சி கலைக்கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை கட்டிடம் கட்டப்படவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.