இளம் பண்டிட் சுட்டுக் கொலை எதிரொலி | காஷ்மீரில் அரசு ஊழியர்கள் போராட்டம்; போலீஸ் கண்ணீர் புகைகுண்டு வீச்சு

காஷ்மீரின் பத்காம் மாவட்டம் பீர்வா பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் பட் (35). இவர் அரசு வருவாய் துறையில் கிளர்க்காக பணியாற்றினார். தற்போது மனைவியுடன் பண்டிட்கள் அதிகம் வசிக்கும் ஷேக்போரா பகுதியில் வசித்து வந்தார். அவருடைய பெற்றோர் ஏற்கெனவே ஜம்முவுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.

இந்நிலையில், கடந்த வியாழக் கிழமை தீவிரவாதிகள் 2 பேர், வருவாய் துறை அலுவலகத்தில் திடீரென நுழைந்து, இருக்கையில் அமர்ந்திருந்த ராகுல் பட் மீது கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் 3 குண்டுகள் நெஞ்சில் பாய்ந்து ராகுல் பட் உயிரிழந்தார்.

இந்த தாக்குதலை கண்டித்தும், நீதி கேட்டும் பத்காம் மாவட்டத்தில் நேற்று அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விமான நிலையம் செல்லும் சாலையில் அவர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீ ஸார் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் பலர் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மெழுகுவர்த்திகளை ஏந்தி ராகுல் பட் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இதையடுத்து பத்காம் மாவட்ட போலீஸ் இணை ஆணையர், போராட்டம் நடந்த இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையில், ராகுல் பட் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின் னணியில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பான, ‘தி ரெசிஸ் டென்ட் பிரன்ட்’ என்ற அமைப்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

மேலும், இந்த ஆண்டில் இதுவரை இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என 28 பேரை
தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு மேலும் பலப்படுத் தப்பட்டுள்ளது. ராகுல் பட் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் முடுக்கிவிடப் பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.