இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31 ஆவது நினைவு நாள் இன்று(21) அனுசரிக்கப்படுகிறது.
நினைவு தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ப. சிதம்பரம் மற்றும் சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்பத்தூரில் 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் திகதி தற்கொலை குண்டுதாரினால் படுகொலை செய்யப்பட்டார்.
தனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‘எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது. அவர் ஒரு இரக்கமுள்ள, கனிவான மனிதராக திகழ்ந்தார். எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை. எங்களுக்கு மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தவர். நான் அவரை மிகவும் இழக்கிறேன். நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்’ என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.