பாடகர் கேகே உடல் மும்பையில் தகனம்: கொல்கத்தாவை பாலிவுட் புறக்கணிக்க ஓம்புரி மனைவி கோரிக்கை!

பாலிவுட் பாடகர் கேகே நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நிகழ்ச்சி நடத்திய போது மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது இறந்துவிட்டார். அவரது மறைவுக்கு பாலிவுட் ஆழ்ந்த இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்தது. கேகே உடல் மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது. வெர்சோவாவில் இருக்கும் இந்து மயானத்தில் அவரது இறுதிச்சடங்குகள் நடந்தன.

இதில் குடும்பத்தினர், நண்பர்கள், பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். பாடகர் ஷங்கர் மகாதேவன், ஜாவேத் அக்தர், சலீம் மெர்ச்சண்ட் உட்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதர பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்தனர். கிருஷ்ணகுமார் குன்னத் என்கிற கேகே-வின் மறைவுக்கு அவரது மகள் தமரா உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார். ‘Love you forever dad’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மகள் தமரா

எதிர்பாராமல் கேகே இறந்தது குறித்து பிரதமர் மோடி உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

மறைந்த நடிகர் ஓம்புரியின் முன்னாள் மனைவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “கொல்கத்தா கேகேயை கொலை செய்துவிட்டது. அதனை மறைக்க கேகேவிற்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. 2500 பேர் மட்டுமே அமரக்கூடிய இடத்தில் 7,000 பேருக்கு அனுமதி கொடுத்ததோடு ஏ.சி. வசதியும் அங்குக் கொடுக்கப்படவில்லை. கேகே நான்கு முறை இது குறித்து கேட்டும் அந்தப் பிரச்னை சரி செய்யப்படவில்லை. அதோடு அடிப்படை மருத்துவ வசதியும் அங்கே இல்லை. இது குறித்து சிபிஐ விசாரிக்கவேண்டும். அதுவரை கொல்கத்தாவில் நிகழ்ச்சிகள் நடத்துவதை பாலிவுட் புறக்கணிக்கவேண்டும்” என்று கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.