ஜம்மு: அமர்நாத் யாத்திரையின்போது பக்தர்களுக்கு உதவும் வகையில் மீட்புக் குழுவினரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யாத்திரை நடத்தப்படவில்லை. இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் 30-ம் தேதி தொடங்கி 43 நாட்கள் நடக்கிறது. பக்தர்களின் பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் ஜம்முவில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் அமர்நாத் யாத்திரையின்போது பல இடங்களில் மலைச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பக்தர்களுக்கு உதவும் வகையில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மீட்புக் குழுவினரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. யாத்திரை சுமூகமாகவும் அமைதியாகவும் நடக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் யாத்திரிகர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படும் என்றும் இதற்காக ராணுவம், போலீஸ், உள்ளூர் நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.