சென்னை: தமிழகத்தில் கோழிப்பணைகளை நடத்த இசைவு ஆணை பெறவேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த ஜனவரி மாதம் ‘கோழிப் பண்ணைகளுக்கான சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்களை’ வெளியிட்டது. இவ்வழிகாட்டுதல்கள் அனைத்து வகையான கோழிப்பண்ணைகளுக்கும் பொருந்தும்.
இதன்படி, ஒரே இடத்தில் 25,000 பறவைகளுக்கு மேல் வளர்க்கும் கோழிப்பண்ணைகள் நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கீழ் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து உடனடியாக கோழிப் பண்ணை நிறுவுவதற்கான இசைவு ஆணை மற்றும் கோழிப் பண்ணை செயல்படுவதற்கான இசைவு ஆணை பெறவேண்டும்.
ஒரே இடத்தில் 5000 முதல் 25,000-க்கு குறைவான அல்லது அதற்கு சமமான பறவைகள் வளர்க்கும் கோழிப் பண்ணைகள் வருகிற 2023 ஐனவரி 1-ம் தேதியிலிருந்து மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து கோழிப் பண்ணை நிறுவுவதற்கான இசைவு ஆணை மற்றும் கோழிப் பண்ணை செயல்படுவதற்கான இசைவு ஆணை பெறவேண்டும்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளும் கோழிப் பண்ணைகளை நிறுவுவதற்கான இசைவாணை மற்றும் செயல்படுவதற்கான இசைவாணையை பெற வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், விபரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தொடர்பு கொண்டும், www.tnpcb.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.