அடித்து நொறுக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ. அலுவலகம்!

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே உடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 50 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில், சிவசேனா கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மட்டும் 40 பேர் என தெரிகிறது. இதனால், மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யப்போகிறாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என சிவசேனா மூத்தத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதற்கான வேலைகளையும் அக்கட்சித் தலைமை தொடங்கி உள்ளது.

அதேசமயம், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை கண்டித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாடண்டா தொகுதி சிவசேனா எம்எல்ஏவும், அமைச்சருமான தனஜி சாவந்தின் கட்சி அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். அவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களுடன் அசாமில் உள்ளார்.

இதேபோல், மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருவதால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.