மகாராஷ்டிராவில் அதிரடி – பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சி இரண்டாக பிளவுப்பட்டு நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 40 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் அசாமில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல, 7 சுயேச்சை எம்எல்ஏக்களும் சிவசேனாவுக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி பெரும்பான்மையை இழந்திருக்கிறது. இதனால் அதிருப்தி எம்எல்ஏக்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கையில் சிவசேனா ஈடுபட்டு வருகிறது.
image

இந்த சூழலில், முதல்வர் உத்தவ் தாக்கரேவை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு எதிர்க்கட்சியான பாஜக, ஆளுநரிடம் நேற்று கடிதம் அளித்தது. இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும் படி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் இன்று உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்த மனுவில், “சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரை தகுதிநீக்கம் செய்யும் விவகாரத்தை ஜூலை 11-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் எவ்வாறு உத்தரவிட முடியும்? எனவே நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.