புதுடெல்லி: இந்த ஆண்டு முதல், தொலைத்தொடர்பு சட்ட சேவை (Tele-Law service), மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். ஜெய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற 18-வது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பொது சேவை மையங்களில் காணொலி உள்கட்டமைப்பு மூலம் வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு விளிம்புநிலை மக்கள் சட்ட உதவி பெறமுடியும். எளிதான மற்றும் நேரடி அணுகலுக்காக, தொலை சட்ட செயலி 2021-ல் (Tele-Law service) தொடங்கப்பட்டது, இது தற்போது 22 மொழிகளில் கிடைக்கிறது. இந்த டிஜிட்டல் புரட்சியின் பயனாக, தொலைத்தொடர்பு சட்ட சேவைகள் ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் பயனாளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன
இந்த நிகழ்வின் போது, நீதித்துறை, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் ஆகியவை இணைந்து சட்ட சேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டன. அப்போது, “அனைவருக்கும் நீதிக்கான காரணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், மக்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய காரணியாக சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதற்கும் எங்களின் கூட்டு உறுதிப்பாட்டின் அடையாளமாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் 700 வழக்கறிஞர்களின் சேவைகளை இத்திட்டத்தின் கீழ் பிரத்தியேகமாக ஆணையம் வழங்கும். இந்த வழக்கறிஞர்கள் இப்போது பரிந்துரை வழக்கறிஞர்களாகவும் செயல்படுவார்கள். மேலும் வழக்குக்கு முந்தைய கட்டத்தில் தகராறு தவிர்ப்பு மற்றும் தகராறு தீர்வுக்கான பொறிமுறையை வலுப்படுத்தவும் உதவுவார்கள் என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.