மும்பையில் வாலிபர் ஒருவர் விரைவில் பணக்காரனாக மாறவேண்டும் என்ற ஆசையில் செய்த காரியம் இப்போது அவரை சிறையில் வைத்திருக்கிறது. மும்பை சாந்தாகுரூஸ் பகுதியை சேர்ந்த 17 வயது நபர் ஒருவர் கூரியரில் பார்சல் ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த பார்சலின் மதிப்பு 9.81 லட்சம் என்று குறிப்பிட்டார். அதோடு அந்த பார்சலை காப்பீடு செய்தார். காப்பீடு செய்த பார்சல் சேதம் அடைந்தால் அதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு கொடுக்கும் என்ற ஆசையில் அந்த வாலிபர் இக்காரியத்தை செய்தார். அதோடு யூடியூப் பார்த்து பட்டாசுகளைக் கொண்டு வெடிகுண்டு தயாரித்து அதனையும் பார்சலில் அனுப்பி வைத்தார்.

இதன் மூலம் பார்சல் சேதம் அடையும் என்றும், இன்சூரன்ஸ் தொகையை வாங்கிவிடலாம் என்று அந்த நபர் திட்டமிட்டார். ஆனால் அந்த பார்சல் கூரியர் அலுவலகத்தில் இருந்த போது வெடித்து சிறிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து தீவிபத்து குறித்து ஆய்வு செய்த போது பார்சலில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே பார்சலை யார் அனுப்பியது என்ற தகவலை பார்த்து அதன் முகவரிக்கு சென்று பார்த்தால் அதனை அனுப்பியது 17 வயது மைனர் வாலிபர் என்று தெரிய வந்தது.
விசாரணையின் ஆரம்பத்தில் அவர் எதையும் கூற மறுத்தார். பின்னர் போலீஸார் அழைத்து சென்று விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்ததாகவும், இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு இக்காரியத்தை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வெடிகுண்டு தயாரிக்க செல்போன், கம்ப்யூட்டர் பிராஸஸர், வயர், மெமரி கார்டு போன்றவற்றையும் வாங்கியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆன்லைன் விளம்பரத்தில் பார்சலில் அனுப்பப்படும் பொருள் சேதம் அடைந்துவிட்டால் அதற்கு இழப்பீடு வழங்கப்படும் என்று கூறப்படுவதை பார்த்து விரைவில் பணக்காரனாக வரவேண்டும் என்று நினைத்து இக்காரியத்தை செய்ததாக நீட் தேர்வுக்கு தயாரிக்கிக்கொண்டிருந்த அந்த நபர் தெரிவித்தார்.