புதுடெல்லி: புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா மற்றும் ஓபிஎஸ் மீது புகார் செய்வதற்காக டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் மறுத்து விட்டனர். இதனால் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார். புதிய ஜனாதிபதியாக பாஜக அறிவித்த வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். இதனால் அவரது பதவி ஏற்பு விழா 25ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதை காரணமாக கொண்டு அதிமுக உள்கட்சி மோதல், ஓ.பன்னீர்செல்வம் மீது புகார் செய்வது என்று பல்வேறு திட்டங்களுடன் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதற்காக நான்கு நாள் டெல்லியில் தங்கியிருக்கவும் திட்டமிட்டார்.நேற்று முன்தினம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமியை அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து சாணக்கியாபுரியில் இருக்கும் புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி பயணத் திட்டத்தின் முதல் நாளாக நேற்று முன்தினம் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய பிரிவு உபசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து இரண்டாவது நாளான நேற்று காலை சுமார் 11.15மணியளவில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து கிளம்பிய எடப்பாடி பழனிசாமி குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோன்று குடியரசுத் தலைவர் தேர்தலில் தமக்கு வாக்களித்து முழு ஆதரவு தந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் திரவுபதி முர்மு நன்றி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்திக்க நேரம் கேட்டு இருந்தார். அப்போது, அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனை, பெரும்பான்மை தமக்கு தான் உள்ளது. அதனால் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன், கட்சிக்குள் ஓ.பன்னீர்செல்வம் செய்த பிரச்சனைகள் ஆகியவை குறித்து விளக்கமாகவும், புகாராகவும் தெரிவிக்க திட்டமிட்டு இருந்தார். மேலும், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர்களும் கான்டராக்டர்களுமான செய்யாத்துரை, முத்து, முருகப் பெருமாள், சரவணப்பெருமாள் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தி பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் கட்டுக்கட்டாக பணம், நகைகளை பறிமுதல் செய்தனர்.இதனால் வருமான வரித்துறை சோதனை குறித்தும் பிரதமர் மோடியிடம் புகார் தெரிவிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்புகின்றனர். இன்று காலை டெல்லியில் இருந்து அவசரமாக புறப்பட்டு, பிற்பகல் சென்னை வருகின்றனர். நான்கு நாள் பயணத்தை இரண்டே நாளில் எடப்பாடி பழனிசாமி முடித்துக் கொண்டு திரும்புவதால் அதிமுகவில் பரபரப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் பிரதமர் மோடியின் ஆதரவு உள்ளது என்று கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமி பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு திரும்புவது குறிப்பிடத்தக்கது.
