வளர்ச்சிப் பணிகளை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன – பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை முன்னாள் எம்.பி. ஹர்மோகன் சிங் யாதவின் 10-ம் ஆண்டு நினைவு தினக் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று நடைபெற்றது.

இதில் டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: பல நேரங்களில் எதிர்க்கட்சிகள், மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகள், திட்டங்களைத் தடுக்கின்றன.

அரசியல் லாபத்துக்காக இதுபோன்ற செயல்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபடுகின்றனர். அவர்கள் பதவியில் இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களைக் கூட நிறைவேற்ற முடியாமல் தடுத்து வருகின்றனர். எதிர்க்கட்சியினரின் போக்கை பொதுமக்கள் விரும்பவில்லை.

கட்சியின் கொள்கைகளோ அல்லது அரசியல் லாபத்தையோ அவர்கள் ஒதுக்கி வைக்க வேண்டும். நாட்டின் நலனுக்காகவும், சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் அவர்கள் பாடுபட முன்வர வேண்டும். அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த அவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டிலேயே முதன்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ஒருவர் குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ளார். இது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.