சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விலகும் ரஷ்யா

மாஸ்கோ: 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகி தங்களுக்கென்று ஒரு தனி விண்வெளி நிலையத்தை அமைக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் விண்வெளி அமைப்பின் தலைவர் யூரி பார்சோவ் கூறும்போது, “நாங்கள் 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விலக இருக்கிறோம். ஆனால் இருக்கும் காலக்கட்டத்தில் நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம். 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்யாவுக்கென ஒரு விண்வெளி நிலையம் தனியாக அமைக்கப்படும்” என்றார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யாவும், அமெரிக்காவும் 1998 ஆம் ஆண்டு முதல் இணைந்து பணியாற்றி வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ரஷ்யா ஆகிய 5 உலக நாடுகள் இணைந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி நிலையம், புவியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு 1998 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆயிரக்கணக்கான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தான் தங்களுக்கென தனியாக விண்வெளி நிலையம் அமைக்கும் முடிவை ரஷ்யா எடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவு கூட்டணி நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

எனினும் இவ்விவகாரத்தில் பிற நாடுகள் ரஷ்யாவின் முடிவை பரீசிலிக்க வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, உக்ரைன் மீது ரஷ்யா எடுத்த ராணுவ நடவடிக்கை காரணமாக ரஷ்யா – அமெரிக்கா இடையே மோதல் அதிகரித்தது. ரஷ்யாவின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன. இதன் விளைவாக சர்வதேச விண்வெளி நிலையத்திலுருந்து விலகும் முடிவை ரஷ்யா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.