சிவகாசி: 4,000 ரூபாயால் ஏற்பட்ட முன்பகை; வாலிபர் வெட்டிக்கொலை – 5 பேர் கைது

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து. இவரின் மகன் முத்துக்குமார். அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலித்தொழிலாளியாக பணி செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தனது மகனைக் காணவில்லை, அவனை யாராவது கடத்திச் சென்றிருப்பார்கள் என சந்தேகப்படுவதாக சிவகாசி நகர் காவல் நிலையத்தில் வைரமுத்து புகார் அளித்தார்.

முத்துக்குமார்

இந்தப் புகாரின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை தேடி வந்தனர். இந்தநிலையில் சிவகாசி அருகே உள்ள தெற்கு ஆனைகூட்டம் காட்டுப்பகுதியில் வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீஸார், சடலமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், காட்டுப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்துக்கிடந்த நபர் காணாமல் போன முத்துக்குமார் தான் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, இந்தக் கொலை தொடர்பாக சிவகாசி நகர் காவல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை, மாரீஸ்வரன், பெரியசாமி, அலார்ட் ஆறுமுகம், சரவணக்குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

கைது

அவர்களிடம் நடத்திய விசாரணையில் 4,000 ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்பகை காரணமாக முத்துக்குமாரை வெட்டிக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.