கேரளாவில் கனமழை நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த தகவலை தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் பேசுகையில், 2001-2021 காலகட்டத்திற்கான தரவின்படி தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) கேரளாவில் கனமழை பெய்வது அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், “கேரளாவில் தானியங்கி வானிலை நிலையங்களின் இணைப்பை அதிகரிக்க இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது. பி.ஐ.எஸ்-1994 தரநிலைகளின் படி கேரளாவில் 115 வானிலை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அந்த மாநிலத்தில் 100 தானியங்கி வானிலை நிலையங்களை அமைக்க இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் முடிவு செய்தது.
புவி அறிவியல் அமைச்சகம் அண்மையில் 77 நிலையங்களை அமைத்ததுடன், மேலும் 23 நிலையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர கேரளாவில் கூடுதலாக 15 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் மொத்தம் 92 நிலையங்கள் அங்கு உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.