புதுச்சேரி: ஏனாமில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்குநிவாரணம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டமுதல்வர் ரங்கசாமி, வரும் காலங்களில் வெள்ளப் பாதிப்பை தவிர்க்க தடுப்பு சுவர் கட்டப்படும் என அறிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் 28 லட்சம் கன அடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இதனால், கோதாவரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்கள் ஒரு வாரத்திற்கு மேல் கடும் அவதிக்கு ஆளாகினர்.
வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட கவர்னர் தமிழிசை, அரசு சார்பில் வெள்ள நிவாரணமாக ரூ.5,000 மற்றும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமி நேற்று, சட்டசபை அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஏனாமில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனையொட்டி, முதலில் அறிவித்தபடி ஏனாமில் உள்ள 11,533 சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு தலா ரூ.5,000 நிவாரணம், 25 கிலோ அரிசியும், 4,195 மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.4,500 நிவாரணமாக வழங்கப்படும்.
இந்த நிவாரணத்தை உடனடியாக வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் நிவாரணம் உடனடியாக மக்களுக்கு கிடைக்கும்.வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் நிலங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு, சேதமதிப்பீடு அளித்ததும், அதற்குரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வெள்ளத்தால் வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாத அளவிற்கு தடுப்புச் சுவர் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு, மத்திய அரசின் ‘இன்வஸ் மென்ட் கிளியரன்ஸ்’ சான்றிதழ் பெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அயர்லாண்டு -3 என்கிற தீவில் வெள்ளத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் சேத விபரங்களை சேகரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கான நிதியுதவி பெற அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
பேட்டியின்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், டில்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement