இதுவரை சினிமாவில் காட்டாத பெண்களின் நட்பு; சிலாகிக்கும் பத்மபிரியா

தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களில் நடித்து சேரனின் ஆஸ்தான நாயகியாக அறியப்பட்டவர் நடிகை பத்மபிரியா. ஒரு கட்டத்தில் படிப்பு, திருமணம் என வெளிநாட்டில் செட்டிலான பத்மப்ரியா, கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கு பிறகு மீண்டும் மலையாள திரையுலகில் தெக்கன் தள்ளு கேஸ் என்கிற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். பிரித்விராஜ் இயக்கி நடித்த ப்ரோ டாடி படத்திற்கு கதை எழுதிய ஸ்ரீஜித் என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் பிஜுமேனனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பத்மபிரியா. இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.

இந்த படம் குறித்து பத்மபிரியா கூறும்போது, “இது எண்பதுகளில் ஒரு சிறிய கிராமத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. பிஜுமேனன் மனைவியாக ருக்மணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். கிட்டத்தட்ட எண்பதுகளில் வாழ்ந்த என்னுடைய பாட்டியின் குணாதிசயங்களை, அவரது வாழ்க்கையை ஞாபகப்படுத்தும் கதாபாத்திரமாக இது அமைந்துள்ளது. இந்த படத்தில் எனக்கும் பக்கத்து வீட்டு பெண்ணாக நடித்துள்ள நிமிஷா சஜயனுக்குமான நட்பு இதுவரை இந்திய சினிமாவில் நான் பார்த்திராத ஒன்று. ஒருவருக்கொருவர் அதீத அன்பும் கவனமும் எடுத்துக்கொண்டு தங்களது நட்பை வெளிப்படுத்தும் அப்படி ஒரு அழகான ரிலேஷன்ஷிப் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது” என்று சிலாகித்து கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.