கேரள ஆளுங்கட்சி தலைவரின் மனைவிக்கு பேராசிரியை பணி – பல்கலைகழக துணைவேந்தர் பதிலளிக்க கவர்னர் உத்தரவு!

திருவனந்தபுரம்,

கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழக துணை வேந்தர் சட்ட விதிகளை பின்பற்றாமல் கேரளாவில் ஆளும் கட்சியான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் ராகேஷின் மனைவிக்கு பணி நியமனம் செய்ததாக புகார் எழுந்தது.

கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் தனி செயலாளராக ராகேஷ் உள்ளார். மேலும் அவர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். இந்நிலையில் அவருடைய மனைவியின் நியமனம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பேராசிரியர் பணிக்கான நேர்காணலில், அவருக்கு முதல் ரேங்க் வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரின் மனைவியான டாக்டர் பிரியா வர்கீஸ், உரிய விதிகளை பின்பற்றாமல் நியமனம் செய்யப்பட்டதாக துணைவேந்தர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டாக்டர் பிரியாவை, மலையாளம் பாட பிரிவில் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதனை அடுத்து அவரது பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் அவருடைய பணி நியமனத்துக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் உரிய விளக்கம் அளிக்குமாறு கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து துணைவேந்தர் டாக்டர் கோபிநாத் ரவீந்திரன் மீது, கவர்னர் கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.