தர்மபுரி: புகார் தெரிவிக்க வந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய மின்வாரிய ஊழியர் குப்புராஜை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த 11ந்தேதி அன்று தர்மபுரி மாவட்டம் தீர்த்தகிரி நகரில் நீண்ட நேரமாக மின்சாரம் இல்லாததால், அதுகுறித்து புகார் அளிக்க அந்த பகுதி மக்கள், அருகே உள்ள பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் மின் அலுவலக்துக்கு சென்று புகார் தெரிவித்தனர். அப்போது, மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளர் இல்லாததால் பணியில் இருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ் , அதிகாரிகள் வந்ததும் தெரிவிக்கிறேன் என்று கூறி உள்ளார். ஆனால், பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை அவரிடம் தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. மின்வாரிய ஊழியர் குப்புராஜ் என்பவர் மின் மீட்டரை கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், ஆத்திரமடைந்த குப்புராஜ் அலுவலகத்தில் இருந்த மின் மீட்டர் ஒன்றை, ‘ஒரே அடி பாக்குறியா’ என ஆவேசத்துடன் கூறியவாறு பொதுமக்கள் மீது தூக்கியடித்தார்.
இந்த விவாகரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அரசு ஊழியர்களின் அதிகார தோரணையையும், மின்சார தடை இல்லை என்றும் கூறும் தமிழக அரசின் பொய்யையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. மேலும், சமுக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து, வேறுவழியின்றி, அந்த மின்வாரிய ஊழியர் குப்புராஜை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். புகார் தெரிவிக்க வந்த பொதுமக்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதால் அவரை பணியிடை நீக்கம் செய்ததாக பாலக்கோடு உதவி செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.