மலேசிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டு சிறை உறுதி

புத்ராஜெயா: ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமரான நஜிப் ரசாக்குக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மலேசியாவின் முன்னாள் பிரதமரான நஜிப் ரசாக், கடந்த 2015ல் அவரது ஆட்சிக் காலத்தில் அரசுக்கு சொந்தமான நிதி முதலீட்டு நிறுவனத்தில் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஊழல்  குற்றச்சாட்டுக்கு ஆளானார். மொத்தம் ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் செய்யப்பட்டதில், ரசாக் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ரூ.100 கோடி வரை ஆதாயம் பெற்றுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த மலேசிய உயர் நீதிமன்றம், ரசாக்குக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், ரசாக்கின் தண்டனையை உறுதி செய்தது. இந்த வழக்கில் எந்த ஒரு நியாயமான காரணங்களும் இல்லாததால், உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர். இதனால், உடனடியாக ரசாக் சிறையில் அடைக்கப்பட உள்ளார். மலேசியாவில் சிறை தண்டனை பெறும் முதல் மாஜி பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.