கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: இழப்பீடு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி!

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்து, அது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து பள்ளியில் நடந்த கலவரம், தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களை அடையாளம் காணக் கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், வழக்கறிஞர் பி. ரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை, அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி செயலாளர் மிரட்டுவதாகவும், அதனால் அவரை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்படுவதை தவிர்க்க, கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவர்களுக்கு தேவையான சட்ட உதவியை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வழங்க அனைத்து மாஜிஸ்திரேட்களுக்கும் அறிவுறுத்தும்படி உயர் நீதிமன்ற நீதித் துறை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரி இருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இழப்பீடு கோரிக்கையுடன் உள்ள வழக்கை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது என்பதால், மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மனுதாரரின் கோரிக்கைகளுடன் தகுந்த வழக்காக தாக்கல் செய்யும்படியும் மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.