கடந்த சில தினங்களுக்கு முன்பாக கர்நாடகாவின் சிவமொக்கா நகரில் வீர்சாவர்க்கர் பேனர் வைத்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அப்போது கர்நாடகாவில் உள்ள சிவமொக்கா நகரில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அந்நகரின் ஏ.ஏ.சதுக்கம் பகுதியில் சிலர் சாவர்க்கர் பேனர் வைத்த சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் பேனரை மற்றொரு தரப்பினர் அகற்ற இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதில் சிலருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறை சம்பவத்தால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா பேசுகையில் “வீர சாவர்க்கர் புகைப்படத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டதால் பலபகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்திலும் பலபகுதிகளில் சர்ச்சைக்குரிய பேனர்கள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனை மாவட்ட, கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் கண்டறிய வேண்டும். மேலும் அவற்றை உடனடியாக அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற வேண்டும். அதுபோன்ற பேனர்களை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தின் முக்கிய சர்க்கிள், சாலை பகுதிகளில் பேனர்கள் வைப்பதற்கு அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு வைக்கும் பேனர்களில் அச்சகத்தின் பெயர் பிரசுரிக்க வேண்டும். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு அறிவுரைகளின் படி மாவட்டத்தில் ஒலிபெருக்கிகள் வைக்க வேண்டும். அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.” என்று கூறினார்.
இந்நிலையில் நேற்று மாலையுடன் தடை உத்தரவு முடிவடைந்த நிலையில் மேலும் 26ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவை நீட்டிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் எதிர்வரும் விநாயகர் சதுர்த்திக்காக பல்வேறு இடங்களிலும் சிலைகளை வைக்கும்போது எந்த பேனரும் வைக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.