வேலுார் மாவட்டம் சத்துவாச்சாரி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு காந்திநகர் பகுதியில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக் ஒன்று வந்ததில் அந்த பைக்கில் முன்பக்கத்தில் மட்டும் பதிவெண் எழுதப்பட்டிருந்தது. பின் பக்கம் எழுதப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அதில் வந்த இரண்டு பேரை விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் கொணவட்டத்தை சேர்ந்த இப்ராஹிம் (வயது 23) ஷேக் தஸ்தகீர் (21) என்பது தெரியவந்த நிலையில், அவர்கள் கையில் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டபோது அதில் 44 சிம் கார்டுகள் இருந்தன. இதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்தனர். இவர்களை இன்ஸ்பெக்டர் அபர்ணா, சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், போலியான அடையாள அட்டைகள் மூலம் சிம்கார்டுகளை பெற்று விற்பனை செய்தது தெரியவந்தது.
முதல்கட்ட விசாரணையில், ‘ஜெராக்ஸ் எடுக்கும் சில கடைகளில், இவர்கள் தொடர்பு வைத்துக் கொண்டு, அங்கு ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுக்க வருபவர்களுக்கு தெரியாமல், ஒரு ஜெராக்ஸ் அதிகப்படியாக எடுத்து, அந்தக் கடைக்காரர்களுக்கு அதற்கு குறிப்பிட்ட பணம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
அவரு வாங்கும் இந்த ஆதார் கார்டில் வேறு போட்டோ ஒட்டி, அதன் மூலமாக 100க்கும் அதிகமான சிம்கார்டுகளை பெற்று, பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், சைபர் கிரைம் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.