சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கு: இலங்கையை சேர்ந்தவரின் தமிழக சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி,

இலங்கையை சேர்ந்தவர் குணசேகரன் என்ற பெரமா குமார். போதைப்பொருள் கடத்திய வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனி கோர்ட்டு, குணசேகரனுக்கும், வேறு சிலருக்கும் சிறைத்தண்டனை விதித்தது.

தண்டனை காலம் முடிந்தவுடன், அவர்கள் தங்களது அடையாளத்தை மாற்றிக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். குணசேகரனும், அவருடைய மகன் திலீப்பும் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தனர். தமிழ்நாட்டில் சொத்துகளும் வாங்கினர்.

இந்தநிலையில், அவர்கள் மீது அமலாக்கத்துறை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள அவர்களது சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களா, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 விவசாய நிலங்கள் ஆகியவை முடக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.33 லட்சத்து 70 ஆயிரம். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குணசேகரன், இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா மீதான தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி, கொழும்பு நகரில் தேர்தல் பிரசாரம் செய்த சந்திரிகாவின் வாகன அணிவகுப்பில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில், 34 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். சந்திரிகா படுகாயம் அடைந்தார். அந்த வழக்கில்தான் குணசேகரன் குற்றம் சாட்டப்பட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.