பல்ராம்பூர்: சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு பள்ளி கல்வி அமைச்சராக பிரேம்சாய் சிங் தேகம் உள்ளார். தற்போது இவர், 2 வகையான சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். சில தினங்களுக்கு முன் வாத்ராப் நகரில் பள்ளிக் மாணவர்களுக்காக நடந்த போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், புகழ் பெற்ற புத்தகமான ‘மதுஷாலா’வின் வரிகளை வாசித்து, ‘மது அருந்துவதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். அதற்கு அடிமையாகி விடக் கூடாது. மது மக்களை ஒன்றிணைக்கிறது. மதுவை சரியான அளவு தண்ணீருடன் கலந்து குடித்தால் உடலுக்கு ஒரு கெடுதலும் இல்லை,’ என்று பேசினார். அடுத்து மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘சாலைகள் குண்டு குழியுமாக இருந்தால், வாகனங்கள் மெதுவாக செல்லும். அதனால், இதுபோன்ற சாலைகளில் விபத்துகளே நடப்பதில்லை. நல்ல சாலைகளில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் நடக்கின்றன,’ என தெரிவித்தார். இதுவும் சர்ச்சையாகி உள்ளது.