மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை| Dinamalar

பாங்காக்:தேர்தலில் மோசடி செய்ததாக கூறி மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு கூடுதலாக 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடியவர் ஆங் சான் சூச்சி. கடந்த 2020ல் நடந்த பொது தேர்தலில் இவர் தலைமையிலான கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
இதை ஏற்க மறுத்த அந்நாட்டு ராணுவம், தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டி கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆட்சியை கலைத்து அதிகாரத்தை கைப்பற்றியது. அதன்பின் ஆங் சான் சூச்சி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, ஊழல் வழக்குகள், தேர்தல் மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு ஆங் சான் சூச்சி மீது வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்குகளை விசாரித்த மியான்மர் நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் ஆங் சான் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. அதை தொடர்ந்து பல்வேறு வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், 17 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை அதிகரித்தது.
தற்போது தேர்தல் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதுவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூச்சி இந்த தீர்ப்பினால் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.