உடல் உறுப்பு தானம்; பொதுநலன் குறித்து சிந்திப்பதே நமது பாரம்பரியம் – மன்சுக் மாண்டவியா பேச்சு

டெல்லி,

டெல்லியில், ‘ஆரோக்கியமான வலுவான இந்தியா’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்தியாவில் உடல் உறுப்பு, கண் தானத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்தும், எதிர்காலத்தில் வரவிருக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

இதில் உரையாற்றிய மன்சுக் மாண்டவியா, நமது சொந்த நலன் மட்டுமல்ல, பொதுநலன் குறித்து சிந்திப்பதே நமது பாரம்பரியம் என்று கூறினார். உறுப்பு தானம் பற்றிய பிரச்சினை அத்தகைய பார்வையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மனித நேயத்திற்காக தங்கள் உறுப்புகளை தானம் செய்ய மக்கள் முன்வருவதை ஊக்குவிக்க, மக்கள் இயக்கமாக இதனை மாற்றவேண்டும் என்று மத்திய மந்திரி கேட்டுக்கொண்ட அவர், உறுப்பு தானம் செய்ய மக்களை ஊக்குவிக்க அரசாலோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலோ மட்டும் சாத்தியமில்லை என்றும், அந்த இயக்கம் வெற்றிபெற அது மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

உடல் உறுப்பு, கண் தானம் குறித்த தேசிய மக்கள் இயக்கம் வெற்றி பெற உழைக்குமாறு அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார். உடல் உறுப்பு தான இயக்கத்தின் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முழு மனதுடன் உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.