சாலைக்காக மரத்தை வெட்டியபோது 100-க்கும் மேற்பட்ட பறவை குஞ்சுகள் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக ஒரு மரத்தை வெட்டிய போது அதிலிருந்த 100-க்கும் மேற்பட்ட பறவைக் குஞ்சுகள் இறந்தன. கேரள மாநிலம், மலப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக நேற்று முன்தினம் அங்குள்ள வி.கே.படி என்ற இடத்திலுள்ள மரங்கள் வெட்டப்பட்டன. அந்த பகுதியில் உள்ள ஒரு புளியமரம் ஜேசிபி இயந்திரம் மூலம் வேரோடு சாய்க்கப்பட்டது. இந்த மரத்தில் நீர் காகம் உள்பட ஏராளமான அரிய வகை பறவைகள் கூடு கட்டியிருந்தன. ஆனால், அதை கவனிக்காமல் மரத்தை வெட்டியதால் 100க்கும் மேற்பட்ட பறவைக் குஞ்சுகள் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கண்டனங்கள் குவிந்தது. மரங்களை வெட்டும்போது அதில் உள்ள பறவை கூடுகளில் முட்டைகளோ, குஞ்சுகளோ இருந்தால் அவை பெரிதாகி பறக்கும் வரை மரத்தை வெட்டக் கூடாது என்று சட்டம் உள்ளது. அதை மீறிய ஒப்பந்தக்காரர் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.